ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
x

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 732 பேர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 732 பேர் பங்கேற்றனர்.

தற்செயல் விடுப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது பிற துறையின் பணிகளை திணித்து நெருக்கடி வழங்குவதை கைவிட வேண்டும். இரவு நேர ஆய்வுகூட்டங்கள் நடத்தக்கூடாது. விடுமுறை நாட்களில் ஆய்வு பணிகள் உயர் அலுவலர்களால் நடத்தப்படுவதை கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர் முதல் உதவி இயக்குனர் நிலை வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

732 பேர் பங்கேற்பு

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, ஈரோடு, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர், தாளவாடி உள்பட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 732 பேர் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் காரணமாக 100 நாள் வேலைதிட்டம், பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் உட்பட மத்திய -மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்து திட்ட பணிகளும் பாதிக்கப்பட்டது. ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்த போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. மேலும் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற டிசம்பர் மாதம் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story