மொரப்பூர் அருகே ஊரக வேலை திட்ட தொழிலாளர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு

மொரப்பூர் அருகே ஊரக வேலைஉறுதித்திட்ட தொழிலாளர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மொரப்பூர்:
தேனீக்கள் கொட்டின
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆர்.கோபிநாதம்பட்டி மயான பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதித்தி்ட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த மர சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் மரத்தில் கூடுகட்டி இருந்த தேனீக்கள் கலைந்து பறந்து வந்து அங்கு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கொட்டின.
அலறியடித்து ஓட்டம்
இதில் தொழிலாளர்களான மங்கம்மாள், மீனாட்சி, சுமதி, உஷா மணி, பழனியம்மாள், யசோதா, சின்னம்மாள், முத்தம்மாள் கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை துரத்தி துரத்தி கொட்டின. இதனால் அலறி அடித்துக் கொண்டு தொழிலாளர்கள் அங்குமிங்குமாக ஓடினார்கள்.
தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரி, தர்மபுரி அருகே உள்ள சோளக்கொட்டாய் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களை தேனீக்கள் கொட்டியதில் அவர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.