சந்தன கட்டைகள் கடத்தியவர் கைது; துப்பாக்கி பறிமுதல்

சிறுமலை அருகே சந்தன கட்டைகள் கடத்தியவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
வனத்துறையினர் ரோந்து
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அருகே தென்மலை பகுதியில், வனப்பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் வனத்துறையினரிடம் சிக்கி கொண்டார்.
விசாரணையில் அவர், சாணார்பட்டி அருகே உள்ள கவராயப்பட்டியை சேர்ந்த செல்வம் என்ற சின்னத்தம்பி (வயது 39) என்பதும், தென்மலை கன்னுக்குட்டி பாறையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காட்டில் தங்கி வேலை செய்ததும் தெரிய வந்தது.
துப்பாக்கி பறிமுதல்
மேலும் தப்பி ஓடியவர், தென்மலையை சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து கன்னுக்குட்டி பாறை பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி துண்டுகளாக்கி பைகளில் வைத்து கடத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து சின்னத்தம்பி, சிறுமலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் சின்னத்தம்பியிடம் இருந்து 71 கிலோ சந்தனகட்டைகள் மற்றும் கோடரி, ரம்பம், அரிவாள், நாட்டுத்துப்பாக்கி, ஏர்கன் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ராஜேந்திரனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.