தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள சுவாமி தரிசனம்
சோபகிருது தமிழ் புத்தாண்டையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கூடலூர்
சோபகிருது தமிழ் புத்தாண்டையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டு
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருவிழாவாகவும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன்படி சுபகிருது ஆண்டு முடிவடைந்து சோபகிருது ஆண்டு நேற்று பிறந்தது.
தமிழ் புத்தாண்டையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதல் மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சக்தி விநாயகர் கோவில்
கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் காலை 5 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகளும், பகல் 11 மணிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சக்தி விநாயகருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது,
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன், சந்தன மலை, குசுமகிரி முருகன் கோவில்கள், பொக்காபுரம் மாரியம்மன், பந்தலூர் முருகன் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பொதுமக்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல் கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.