சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை,
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான பருவக்கால மருத்துவ முகாமை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா, உட்பட அதிகாரிகளும் உடனிருந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
நேற்றைய மருத்துவ முகாமில் சென்னையில் 82,000 பேர் பயன்பெற்றுள்ளனர் . சென்னையில் கடந்த ஆண்டு மழையின் போது நீரில் தத்தளித்த இடங்களில் 80%-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை. தற்போது மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு பெருமழையில் மக்களை பாதிப்பில் இருந்து முதல்-அமைச்சர் காப்பாற்றியுள்ளார் . அதனால் அவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சென்னையில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவை ஏற்பட்டால் கூடுதல் மின்மோட்டார்கள் வரவழைக்கப்படும்.
நவ.9ம் தேதிக்கு பிறகு பெருமழை பெய்தால் அதனை சமாளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் வீணாவதை தடுக்க சிக்கராயபுரத்தில் உள்ள குவாரியில் நீரை சேமிப்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.
தேவையான இடங்களில் மின் மோட்டார்களை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒட்டேரி, கூவம் போன்ற இடங்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் பணி நாளை முழுவதும் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.