சாலை சீரமைக்கும் பணியை தொடங்காவிட்டால் மறியல்


சாலை சீரமைக்கும் பணியை தொடங்காவிட்டால் மறியல்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்தளங்குடி-பில்லாளி இடையே சாலை சீரமைக்கும் பணிகளை தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

மத்தளங்குடி-பில்லாளி இடையே சாலை சீரமைக்கும் பணிகளை தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சி மத்தளங்குடி, அனவாசநல்லூர், பில்லாளி கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலை வழியாக அப்பகுதி மக்கள் பில்லாளி வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பயத்தாங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல் பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த வழியாகத்தான் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பில்லாளி செல்லும் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் ஜல்லிகற்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அரசு ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. சாலை முழுவதும் பொக்லின் எந்திரம் மூலம் பெயர்த்து ஜல்லிக்கற்கள் அப்படியே போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சாலைமறியல்

தற்போது நீர் நிலைகளில் காவிரி நீர் வந்துள்ளதால் வயல்வெளியில் கூட நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் சாலை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் ஒன்றிணைந்து திருப்பயத்தங்குடியில் வருகிற 28-ந் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.




Next Story