கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்


கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
x

கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

கல்வி உதவித்தொகை

மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்து தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.

2023-24-ம் நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ-மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ-மாணவிகள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்விற்கு வருகிற 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

ஆவணங்கள்

எழுத்து தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் https://socialjustice.gov.in/schemes ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story