மனிதநேய மக்கள் கட்சி கொடியை அகற்றியதை கண்டித்து திடீர் மறியல்


மனிதநேய மக்கள் கட்சி கொடியை அகற்றியதை கண்டித்து திடீர் மறியல்
x

மனிதநேய மக்கள் கட்சி கொடியை அகற்றியதை கண்டித்து திடீர் மறியல் போாட்டம் நடைபெற்றது.

திருச்சி

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு மாவட்ட தலைவரும், 28-வது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமையில் திருச்சியில் 15 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திருச்சி உறையூர் 24-வது வார்டு குறத்தெரு பகுதியிலும், 10-வது வார்டு தாக்கர் ரோடு பகுதியிலும், 11-வது வார்டு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட 3 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை இந்த பகுதிகளில் ஏற்றப்பட்ட கட்சி கொடியை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

இதனை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் உறையூர் போலீஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து உறையூர் குறத்தெரு மெயின் ரோட்டில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story