ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த என்ஜினீயர் தற்கொலை

தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கவின் குமார் (வயது 23). இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் அடிக்கடி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளையாடி வருவதாக கூறப்படுகிறது.
அப்போது ஆன்லைன் சூதாட்டம் விளையாட ரூ.3 லட்சம் கடன் வாங்கி பந்தயம் கட்டி விளையாடி வந்ததால் பணத்தை இழந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக பணத்தை இழந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் கவின்குமார் குளியலறைக்கு சென்று தூக்கில் தொங்கினார்.
தற்கொலை
இவர் தூக்கில் தொங்குவதை அவருடைய தம்பி பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கவின்குமாரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு கவின்குமாரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தாராபுரம் பகுதியில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.