சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று பதவியேற்பு..!


சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று பதவியேற்பு..!
x

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று பதவியேற்கிறார்.

சென்னை,


சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, மும்பை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்கு மாறு, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த ஏப். 19-ல் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை ஏற்று,மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிழச்சியில் அவருக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதால், அவர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.


கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் மராட்டிய மாநிலத்தில் பிறந்த நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார். 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்துவருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி இவர் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story