தேய்பிறை அஷ்டமி சொர்ண ஆகர்ஷண பைரவர் சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள் பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின் போது சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது பக்தர்களால் வழங்கப்பட்ட சந்தனம், மஞ்சள், திருமஞ்சன பொடி, பால், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என கோஷமிட்டு வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து அரளி உள்ளிட்ட பூக்களால் மலர் அபிஷேகம் செய்து வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்து சென்றனர்.
சிறப்பு வழிபாடு
இதேபோல் தாடிக்கொம்புவை அடுத்த அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள கால பைரவருக்கும் நேற்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுக்காம்பட்டி சித்தர் துரை ஆதித்தன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூஜையையொட்டி அகரம் முத்தாலம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தாடிக்கொம்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.