இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையமே நீக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரை தேர்தல் ஆணையமே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினார்கள்.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரை தேர்தல் ஆணையமே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினார்கள்.
ஆய்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தேர்தல் தாசில்தார் சச்சிதானந்தம், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையருமான அனில்மேஷ்ராம் கலந்து கொண்டு வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து கருத்துகள் கேட்டறிந்தார். அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறியதாவது:-
தேர்தல் ஆணையமே நீக்க வேண்டும்
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரை முழுமையாக நீக்கம் செய்வதில்லை. இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்காக தகவல் தெரிவித்தால் அதற்கு இறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அனைவரும் இறப்பு சான்றிதழுடன் சென்று பெயரை நீக்குவது கிடையாது. அதனால் இறந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் தொடர்கிறது. எனவே இதனை தேர்தல் ஆணையமே கையில் எடுத்துக் கொண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இறப்பு சான்றிதழ் வழங்கும்போது அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் முறையை அமல்படுத்த அரசுக்கு தெரிவிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் எத்தனைமுறை திருத்தம் செய்தாலும் பெயர் முழுமையாக திருத்தப்படாமல் வருகிறது. அதேபோல் அடையாள அட்டைகளில் புகைப்படம் மாறி, மாறி வருகிறது. பல நவீன வசதிகள் வந்தபின்னரும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டா தெளிவாக தெரிவதில்லை. இதுபோன்ற தவறுகளை களைய வேண்டும். 18 வயது நிரம்பிய மாணவ-மாணவிகள் எளிதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூறினார்கள்.
திருத்திக் கொள்ள வேண்டும்
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது தொடர்பான முகாம்கள் நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பார்வையிட்டு தவறு இருந்தால் சரிசெய்து கொள்ளலாம். தேர்தலுக்கு முன்பாகவே அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை சரிபார்த்து திருத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் அட்டையில் தவறு இருந்தால் 90 சதவீதம் வாக்களிக்க வாய்ப்பு இல்லை. கல்லூரிகளில் வாக்குச்சாவடிகள் இயங்கி வருகிறது. அதன்மூலம் மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.