விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

செய்யாறில் விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு,

செய்யாறில் விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விபத்தில் பலி

செய்யாறு தாலுகா மடிப்பாக்கம் கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் பழனிமுருகன். இவரது மகன் ராம்குமார் (வயது 26), மளிகை கடையை வைத்து இருந்தார்.

இவர், கடந்த 14.1.2016 அன்று மளிகை கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலை வீரம்பாக்கம் புதூர் கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது வந்தவாசியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதியதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நஷ்டஈடு வழங்கக்கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பா செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி நஷ்ட ஈடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு 20.1.20 அன்று உத்தரவிட்டார்.

அரசு பஸ் ஜப்தி

2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து புஷ்பா செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் கட்டளை நிறைவேற்றும் மனுவினை தாக்கல் செய்தார்.

அந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட சார்பு நீதிபதி குமரவர்மன், நஷ்டஈடு தொகையை அசலும் வட்டியுமாக சேர்த்து ரூ.14 லட்சத்தை போக்குவரத்துக் கழகம் செலுத்த வேண்டும் என்று கடந்த 6.7.22 அன்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நஷ்டஈடு தராததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில், செய்யாறு பஸ் நிலையத்தில் இன்று காலை தயார் நிலையில் நின்று கொண்டு இருந்த செய்யாறு பணிமனையை சேர்ந்த அரசு பஸ்சை கோர்ட்டு அமீனா ஜப்தி செய்து சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.


Next Story