குளச்சல் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி

குளச்சல் அருகே புளி பறிக்க ஏறிய கொத்தனார் மரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
குளச்சல்,
குளச்சல் அருகே புளி பறிக்க ஏறிய கொத்தனார் மரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
கொத்தனார்
குளச்சல் அருகே உள்ள பனவிளை ராவிளையை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ் (வயது 52), கொத்தனார். இவருக்கு லதா(45) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் மிக்கேல் ராஜ் தனது வீட்டில் நின்ற மரத்தில் புளி பறிக்க ஏறினார். மரத்தில் புளி பறித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பரிதாப சாவு
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மிக்கேல் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மிக்கேல்ராஜின் மனைவி லதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.