வட்டார கல்வி அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வாணியம்பாடி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்படாததால் வட்டார கல்வி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்படாததால் வட்டார கல்வி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சேதமடைந்த பள்ளி கட்டிடம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மொத்தம் 196 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் பாதுகாப்பு கருதி வளையாம்பட்டு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் சில மாதங்களாக பள்ளி இயங்கி வந்தது. சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட கல்வித்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்கள் பாதிப்பு
ஆனால் பள்ளி அமைந்துள்ள இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால் அங்கு மீண்டும் பள்ளி கட்டிடங்கள் கட்ட தடையாக உள்ளது என கூறப்படுகிறது. தற்காலிகமாக பள்ளி இயங்கி வரும் அரசு கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால் மீண்டும் பழைய இடத்திலேயே பள்ளி செயல்பட தொடங்கியது.
இங்கு போதிய வகுப்பறை இல்லாததால் ஒரு வகுப்பறையில் இரண்டு வகுப்பு மாணவர்களை அமர வைத்து, ஆசிரியர்கள் தனித்தனியாக பாடம் நடத்தி வருகின்றனர். சில வகுப்பு மாணவர்களை மரத்தடியில் உட்கார வைத்து பாடம் நடத்துவதால் மரத்தில் உள்ள பூச்சிகள் மாணவர்கள் மீது விழுந்து பாதிப்படைந்து வருகின்றனர்.
அதிகாரியை முற்றுகை
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பலமுறை கல்வி அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று சில மாணவர்களுக்கு பூச்சிகள் கடித்து அரிப்பு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆலங்காயம் வட்டார கல்வி அதிகாரி சித்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும், அதே நேரத்தில் பள்ளி கட்டிடமும் விரைவாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரி மற்றும் போலீசார் உறுதியளித்ததின் பேரில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.