கணவன், குழந்தையை விட்டுவிட்டு காதலனை பார்க்க சென்ற பெண்: அடுத்து நடந்த விபரீதம்


கணவன், குழந்தையை விட்டுவிட்டு காதலனை பார்க்க சென்ற பெண்: அடுத்து  நடந்த விபரீதம்
x
தினத்தந்தி 17 April 2024 1:17 AM GMT (Updated: 17 April 2024 1:37 AM GMT)

தன்னை தேடி சொந்த ஊருக்கு வந்த காதலியை பார்த்த காதலன் அதிர்ச்சி அடைந்தார்.

திண்டுக்கல்,

சென்னை மாதவரத்தை அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் பிரவின்பிரபு (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி தேவி (24). இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். இதற்கிடையே திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர், அகரம் பகுதியில் தங்கி இருந்து வேலை செய்தார்.

அப்போது திண்டுக்கல் வாலிபருக்கும், தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டார். இதை தொடர்ந்து அவரை சந்திக்க தேவி, நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு வந்தார். தன்னை தேடி சொந்த ஊருக்கு வந்த தேவியை பார்த்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வாலிபரின் குடும்பத்தினர் தேவிக்கு அறிவுரைகள் கூறி, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அனைத்து மகளிர் போலீசார், தேவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் தேவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து திண்டுக்கல்லுக்கு வந்து அவரை அழைத்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

அதோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் சமூகநலத்துறையின் சகி அமைப்பின் காப்பகத்தில் தேவியை தங்க வைத்தனர். இதற்கிடையே மனஅழுத்தத்தில் இருந்த தேவி நேற்று அதிகாலை 5 மணிக்கு, காப்பகத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story