வனப்பகுதிக்குள் சென்று குளிக்கும் சுற்றுலா பயணிகள்


வனப்பகுதிக்குள் சென்று குளிக்கும் சுற்றுலா பயணிகள்
x

நீர்வரத்து அதிகரித்ததால் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க செல்கின்றனர். எனவே வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

நீர்வரத்து அதிகரித்ததால் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க செல்கின்றனர். எனவே வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள அத்திக்கோவில், பாப்பானத்தான் பெருமாள் கோவில், தலமலையான் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் இங்கு குளிப்பதற்காக வருகின்றனர். இவ்வாறு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகள், இளைஞர்கள் இப்பகுதியிலுள்ள ஆற்றுப்பகுதிகளின் வழியாக மலை பகுதிகளுக்குள் வெகுதூரம் சென்று அங்குள்ள நீர்வரத்து பகுதிகளில் குளிப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

தடையை மீறி குளியல்

தமிழகத்தில் மேலும் தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வனத்துறையினர் நீர்வரத்து வரும் பகுதிகளான அத்திக்கோவில், தலமலையான் கோவில், பாப்பானத்தான் பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சென்று குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் வனத்துறையினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். தடையை மீறி வனப்பகுதிக்குள் சென்று வரும் நபர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story