வேப்பனப் பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்


வேப்பனப் பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
x

வேப்பனப் பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்தது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனபள்ளி மற்றும் எப்ரி, சிகரலப்பள்ளி வனப்பகுதிகளில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டுயானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் அந்த பகுதியில் உள்ள நந்த கோபால் என்பவருடைய விவசாய நிலங்களில் உள்ள மா மரக்கிைளகளை முறித்து சேதப்படுத்தியும், விளைநிலங்களில் புகுந்தும் அட்டகாசம் செய்துள்ளது. சத்தம் கேட்டு சென்ற கிராம மக்கள் 2 காட்டு யானைகளையும் வெடிகள், பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் ஊருக்குள் வந்து நாய்களை துரத்தி சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கொங்கனபள்ளி, கே கொத்தூர் கிராமம் மற்றும் மலைப்பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் வகையில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story