ஆபத்தான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிக்கப்படுமா?


ஆபத்தான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிக்கப்படுமா?
x

மேலப்பூதனூரில் ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

மேலப்பூதனூரில் ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலகம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்து உள்ளது.

இந்த அலுவலகத்திற்கு மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த அலுவலக கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பழுது நீக்கம் செய்யப்பட்டது.

இடிந்து விழும் நிலையில் உள்ளது

இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம் எந்தவித பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக் காலத்தில் கட்டிடத்துக்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது. கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ள இங்கு பணிபுரியும் அலுவலர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நடவடிக்கை

தற்போது ஆன்லைனில் பல்வேறு சான்றிதழ்களை பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தாலும் பல சான்றிதழ்கள் நேரில் சென்று வாங்க வேண்டி உள்ளதால் மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும், இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள். சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story