அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளுக்கு படையெடுத்த பெண்கள்

திண்டுக்கல்லில் அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளுக்கு பெண்கள் படையெடுத்தனர்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் திருதியை அட்சய திருதியை திருநாளாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் லட்சுமிதேவி வாசம் செய்யும் பொருட்களை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றை பொதுமக்கள் வாங்குவார்கள். அதன்படி, நேற்று அட்சய திருதியை தினமாகும். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பல நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் விதவிதமான மாடல்கள் மற்றும் வடிவங்களில் நகைகள் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.
இதற்கிடையே திண்டுக்கல்லில் நேற்று காலை 6 மணி முதலே ஒருசில நகைக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்தது. இதையடுத்து அட்சய திருதியை தினத்தில் முதல் பொருளாக தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆவலில் நகைக்கடைகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல அனைத்து நகைக்கடைகளும் திறக்கப்பட்டன. பெரும்பாலான நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. புதிய மாடல் நகைகளை பெண்கள் அணிந்து அழகு பார்த்து பின்னர் வாங்கினர். இதில் வசதி படைத்தவர்கள் பவுன் கணக்கில் நகைகளை வாங்கி குவித்தனர். அதேபோல் நடுத்தர வர்க்கத்தினர் எப்படியாவது தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் குறைந்தபட்சம் 2 கிராம் மோதிரம், கம்மல் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட இருமடங்காக அதிகரித்ததால் மேற்குரத வீதி, கிழக்கு ரதவீதி, மெயின்ரோடு, மாநகராட்சி அலுவலக சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.