பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
ஸ்ரீவைகுண்டத்தில் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டம்:
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருட்டு வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் நல்லதுரை (வயது 25). இவர் குரும்பூர் பகுதியில் பேட்டரி திருடிய வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது அவர் கோர்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தை சேர்ந்த பெண்களுடன் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்தார்.
பாலியல் தொந்தரவு
அப்போது அந்த பெண்களுக்கு நல்லதுரை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அந்த பெண்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நல்லதுரை அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதை கவனித்த அங்கிருந்த பொதுமக்கள் நல்லதுரையை சுற்றிவளைத்து பிடித்து வைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வாலிபர் கைது
அதன்பேரில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசாரிடம் பொதுமக்கள் நல்லதுரையை ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்கிளின் வழக்குப்பதிவு செய்து நல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கைதான நல்லதுரை மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டுக்கு விசாரணைக்காக வந்த பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.