ஊழல் வழக்கு விசாரணைக்காக இம்ரானின் காவலை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு


ஊழல் வழக்கு விசாரணைக்காக இம்ரானின் காவலை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு
x

கோப்புப்படம்

சிறையில் உள்ள இம்ரான்கானிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தோஷகானா ஊழல் உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதில் பெரும்பான்மை பெறாததால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தோஷகானா ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இதனையடுத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர்.

பின்னர் பாதுகாப்பு கருதி ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவரை விசாரணை நடத்துவதற்கு புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்தன. ஆனால் சிறையில் அவர் சித்ரவதை செய்யப்படுவதாக இம்ரான்கான் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். எனவே அங்கு விசாரணை நடத்த அனுமதிக்கக்கூடாது என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதன்படி சிறையில் வைத்து விசாரணை நடத்துவதற்கு கோர்ட்டு தடை விதித்தது.

இந்தநிலையில் நேற்று அவரிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது அல்-காதர் பல்கலைக்கழகத்தை நிறுவ 57 ஏக்கர் நிலம் இம்ரான்கானுக்கு பரிசாக அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதுவே அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கு எனப்படுகிறது.

இந்த வழக்கில் நேற்று 2 மணி நேரத்துக்கும் அதிகமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் இம்ரான்கானின் பங்கை விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் அடியாலா சிறைக்குச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story