சோனாலி பிந்த்ரே இந்தியா திரும்பினார் , நன்கு குணமடைந்து வருவதாக கணவர் தகவல்

புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு சோனாலி பிந்த்ரே இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார்.

Update: 2018-12-03 03:35 GMT
மும்பை,

பம்பாய், காதலர் தினம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை மணந்த இவருக்கு ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சோனாலி பிந்த்ரே டுவிட்டரில் தெரிவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கினார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து பலரும் வாழ்த்தினர். சோனாலி பிந்த்ரே, நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை விமானம் மூலமாக சோனாலி பிந்த்ரே மும்பை வந்தார். சோனாலி பிந்த்ரேவுடன் அவரது கணவர் கோல்டி பெல்லும் உடன் வந்தார். 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோல்டி பெல், “சோனாலி பிந்த்ரே நன்கு உடல் நலம் தேறி வந்து கொண்டிருக்கிறார். இனி மேற்கொண்டு சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல வேண்டியதில்லை. வழக்கமான பரிசோதனைகள் மட்டும் செய்துகொண்டால் போதும் . உங்கள் அனைவரது ஆதரவுக்கு மிக்க நன்றி. அவர் (சோனாலி பிந்த்ரே) மிகவும், உறுதியான, திடமான பெண். அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார். 

மேலும் செய்திகள்