14 படங்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றினர் சந்தீப் கிஷன் வருத்தம்

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன்.

Update: 2019-07-10 00:17 GMT
தற்போது நரகாசுரன், கண்ணாடி, கசடதபற ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாதான் எனக்கு மூச்சு. தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக ஆசைப்பட்டேன். தெலுங்கில் ரகுல்பிரீத் சிங்குடன் நடித்த வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் வெற்றி பெற்றது. அந்த படத்துக்குப்பின் பெரிய நடிகர்கள் பட்டியலில் இடம்பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை. 2 வருடங்களாக நடிக்கவில்லை.

படங்கள் தோல்வியால் வாய்ப்புகள் வரவில்லை. தோல்விக்கு நான்தான் காரணம் என்று பழிசுமத்தினர். மனதில் எவ்வளவோ வலிகள் ஏற்பட்டன. ஆனாலும் அவற்றை கடந்து சென்றேன். இதுவரை 14 படங்களுக்கு சம்பளமே வாங்காமல் இலவசமாக நடித்து இருக்கிறேன். அந்த படங்களின் கதைகள் பிடித்ததால் பணம் வாங்காமல் நடித்தேன்.

படம் வெற்றி பெற்றதும் சம்பளம் தருவதாக தயாரிப்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர். அவற்றில் பாதிக்கு மேல் படங்கள் தோல்வி அடைந்தன. அதனால் அவர்கள் பணம் தரவில்லை. வெற்றி பெற்ற படங்களுக்கும் சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டனர். படங்கள் தோல்வி அடைந்ததும் பயந்து வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விட்டேன். திரும்பி வந்ததும் மீண்டும் பட வாய்ப்புகள் வந்ததால் நடிக்க ஆரம்பித்து உள்ளேன்.” இவ்வாறு சந்தீப் கிஷன் கூறினார்.

மேலும் செய்திகள்