ரூ. 200 கோடியில் தயாரான பிரபாஸ் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

பிரபாஸ் நடித்த சாஹோ படத்தை அடுத்த மாதம் 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Update: 2019-07-19 23:00 GMT
பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான பிரபாஸ் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரூ.200 கோடி செலவில் தயாரான சாஹோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஸ்ரத்தா கபூர் கதாநாயகியாக வருகிறார். ஜாக்கிஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மன்ச்ரேகர், அருண் விஜய் ஆகியோரும் உள்ளனர். சுஜித் டைரக்டு செய்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் சாஹோ படத்தில் இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சண்டை காட்சிகளை ரூ.70 கோடி செலவில் படமாக்கி உள்ளனர். டைஹார்ட், டிரான்ஸ்பார்மர்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள் சண்டை காட்சிகளை வடிவமைத்து உள்ளனர்.

இந்த படத்தை சுதந்திர தினத்தையொட்டி, அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

இதனால் 10-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்த அஜித்குமாரின் நேர் கொண்ட பார்வை படத்தை 8-ந் தேதிக்கு மாற்றினர்.

இந்த நிலையில் சாஹோ படத்தை அடுத்த மாதம் 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

காட்சிகளில் நேர்த்தியை கொண்டுவருவதற்காகவே இந்த தாமதம் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்