ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.3.9 லட்சம் மோசடி

ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி ரூ.3.9 லட்சம் மோசடி செய்ததாக இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-19 04:08 GMT

சென்னை,

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது படத்தில் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக பெங்களூருவில் மோசடி நடந்துள்ளது. மர்ம நபர்கள், ரஜினிகாந்தின் 171-வது படத்தில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்று சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர். ரஜினி படம் என்றதும் நிறைய பேர் ஆசையோடு தேர்வுக்கு சென்றனர்.

அவர்களிடம் கேஸ்டிங் டைரக்டர் என்று சிலர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி பணம் வாங்கிக் கொண்டு மாயமாகி விட்டனர்.

இதில் ரஜினியுடன் நடிக்கும் ஆசையில் ரூ.3.9 லட்சத்தை கொடுத்து ஏமாந்த மிருதுளா என்ற பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். "ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு என்றதும் உடனே பணம் கொடுத்துவிட்டேன். இந்த மோசடிக்கு தலைவராக சுரேஷ்குமார் என்பவர் இருந்தார்'' என்று அவர் கூறியுள்ளார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்