"30 வருடங்களுக்குப் பின் நடிக்க வந்தது ஏன்?" நடிகை அமலா பேட்டி

“30 வருடங்களுக்குப் பின் நடிக்க வந்தது ஏன்?” என்று நடிகை அமலா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2022-09-03 06:49 GMT

1990-களில், தமிழ் திரையுலக 'கனவுக்கன்னி'களில் ஒருவராக இருந்தவர், நடிகை அமலா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனை காதல் திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்துக்குப்பின் நடிக்கவில்லை.

சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர், 30 வருடங்களுக்கு பிறகு, 'கணம்' என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். கதாநாயகன் சர்வானந்தின் அம்மாவாக அவர் நடிக்கிறார்.

இந்த பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அமலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அமலா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 30 வருடங்களாக நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நீங்கள், இப்போது திடீர் பிரவேசம் செய்தது ஏன்?

பதில்:- திருமணத்துக்குப்பின் நான் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தாலும், வீட்டில் சும்மா இருக்கவில்லை. பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு, 'பிஸி'யாகவே இருந்தேன்.

இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் பிடித்து இருந்தது. டைரக்டர் ஸ்ரீகார்த்திக் கதை சொன்ன விதம் பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன். இது, என் திரையுலக பயணத்தில் மறக்க முடியாத படமாக இருக்கும்.

கேள்வி:- அம்மா வேடத்தில் நடித்தது எந்த வகையிலாவது வருத்தம் அளித்ததா?

பதில்: எனக்கு பிடித்ததால்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை.

கேள்வி:- சர்வானந்துக்கு அம்மாவாக நடிக்கும்போது, உங்கள் மகன் அகில் நினைவுக்கு வந்தாரா?

பதில்:- படம் பாருங்கள், புரியும்.

கேள்வி:- இளைய தலைமுறை நடிகர்-நடிகைகளில் உங்களுக்கு யாரை பிடிக்கும்?

பதில்::- நிறைய பேர் இருக்கிறார்கள்.

கேள்வி:- பொதுவாக திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுக்கு தாயான பின், சில நடிகைகள் குண்டாகி விடுகிறார்கள். நீங்கள் 30 வருடங்களாக அப்படியே இருக்கிறீர்களே....எப்படி?

பதில்:- நான் வீட்டில் சும்மா இருப்பதில்லை. ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பேன். அதனால்தானோ என்னவோ...நான் குண்டாகவில்லை.

கேள்வி:- நீங்கள் நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் படம் எது?

பதில்:- டி.ராஜேந்தரின் 'மைதிலி என்னை காதலி, அக்னி நட்சத்திரம், பேசும் படம்.

இவ்வாறு அமலா கூறினார்.

பேட்டியின்போது நடிகர்கள் நாசர், சர்வானந்த், பட அதிபர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்