மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வட மாநில பயணியிடம் 16 பவுன் நகை-பணம் திருட்டு மர்மநபர் கைவரிசை

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வட மாநில பயணியிடம் 16 பவுன் நகை-பணம் திருட்டு மர்மநபர் கைவரிசை

Update: 2016-12-17 21:36 GMT
திருச்சி,

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வட மாநில பயணியிடம் 16 பவுன் நகை- பணத்தை மர்மநபர் திருடி சென்றார்.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சோனல்கான் ஜெயின் (வயது 64). இவர் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சோனல்கான் ஜெயின் ராஜஸ்தான் சென்றார். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை வந்தார்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் சோனல்கான் ஜெயின் தனது குடும்பத்துடன் கடந்த 15-ந்தேதி இரவு பயணம் செய்தார். உடைமைகளை அவர்களது இருக்கையின் அருகே வைத்திருந்தனர். ரெயில் நேற்று முன்தினம் காலை திருச்சி வந்தது.

16 பவுன் நகை திருட்டு

ரெயிலில் இருந்து இறங்கிய பின் சோனல்கான் ஜெயின் வீட்டிற்கு சென்றதும் தனது உடைமையை பார்த்த போது அதில் ஒரு பை திறந்து இருந்தது. மேலும் அதன் உள்ளே வைத்திருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். ஓடும் ரெயிலில் மர்மநபர் யாரோ நகை மற்றும் பணத்தை திருடியிருக்கலாம் என கருதினார். இது குறித்து திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாதுகாப்பு படையில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் ஓடும் ரெயிலில் வட மாநில பயணியிடம் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்