சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே பயங்கரம் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய கூலி தொழிலாளி மீது சொகுசு கார் ஏறியது கார் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பலி

சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய கூலி தொழிலாளி மீது சொகுசு கார் ஏறியதால், கார் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கார் சக்கரத்தில் சிக்கி பலி சென்னை வடபழனி பரமேஸ்வரி காலனி, 5–வது தெருவைச் சேர்ந்தவர

Update: 2016-12-18 22:00 GMT

பூந்தமல்லி

சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய கூலி தொழிலாளி மீது சொகுசு கார் ஏறியதால், கார் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

கார் சக்கரத்தில் சிக்கி பலி

சென்னை வடபழனி பரமேஸ்வரி காலனி, 5–வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 55). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பாஸ்கர், குடித்து விட்டு போதையில் வடபழனி முருகன் கோவில் செல்லும் வழியில் சாலையோரம் உள்ள பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் அந்த வழியாக தறிகெட்டு ஓடி வந்த சொகுசு கார் ஒன்று பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய பாஸ்கர் மீது ஏறியது. மோதிய வேகத்தில் பாஸ்கரை நடைமேடையில் இருந்து சாலைக்கு தரதரவென சிறிது தூரம் இழுத்துச்சென்று கார் நின்று விட்டது.

தப்பி ஓட்டம்

இதில் பாஸ்கர், உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் வந்தவர்கள், காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சத்தம் கேட்டு அருகில் அதே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியவர்கள் எழுந்து ஓடி வந்தனர். கார் சக்கரத்தில் சிக்கி பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பலியான பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடரும் சம்பவம்

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சொகுசு காரின் பதிவு எண்ணை வைத்து அந்த காரின் உரிமையாளர் யார்?, காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியவர்கள் யார்?, குடிபோதையில் காரரை ஓட்டி வந்தனரா? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக பணக்கார வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர்கள், தொழில் அதிபர்களின் பிள்ளைகள் நள்ளிரவில் குடிபோதையில் வேகமாக சொகுசு கார்களை ஓட்டி வந்து நடைமேடையில் படுத்து தூங்கும் அப்பாவிகள் மீது காரை ஏற்றி உயிர் பலி வாங்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்