சிறுநீரக தொற்று, மூட்டுவலி பேரறிவாளனுக்கு அடுக்கம்பாறை மருத்துவமனையில் பரிசோதனை பலத்த காவலுடன் போலீசார் அழைத்து வந்தனர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று, மூட்டுவலிக்காக அடுக்கம்பாறை

Update: 2017-02-27 23:00 GMT

அடுக்கம்பாறை,

கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறுநீரக தொற்று நோய், மூட்டுவலி உள்ளிட்ட கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு சென்னை அரசு மருத்துவமனையில் அவர் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். டாக்டர்கள் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார். குறிப்பிட்ட கால இடைவெளியில் வேலூர் அடுக்கம்பாறையில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெறுகிறார்.

அதன்படி நேற்று அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முன்னதாக அவரை மத்திய சிறையிலிருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காலை 9.30 மணியளவில் அழைத்து வந்தனர்.

ரத்த பரிசோதனை

அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். முன்னதாக அவருக்கு ரத்த பரிசோதனையும், சிறுநீர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மூட்டுவலி சிகிச்சைக்காக எக்ஸ்ரேவும் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் டாக்டர்கள் அவருக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

பின்னர் வெளியேவரும் முன் பேரறிவாளன் அங்கிருந்த டாக்டர்களிடம் பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கும்? என கேட்டார். அடுத்தவாரம் கிடைத்து விடும் என டாக்டர்கள் பதில் அளித்தனர்.

பின்னர் அவரை சிறைக்கு கொண்டு செல்வதற்காக வேனில் அமர வைத்தனர். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ‘‘வலி உள்ளதா? என கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் மூட்டு வலி உள்ளது. டாக்டர்கள் மருந்து கொடுத்துள்ளனர்’’ என்றார். அதனை தொடர்ந்து பலத்த காவலுடன் போலீசார் மத்திய சிறைக்கு அழைத்துச்சென்று அங்கு அடைத்தனர்.

மேலும் செய்திகள்