ரெயில் பாதை சீரமைப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ஜல்லி எந்திரம் மீது மின்சார ரெயில் உரசியது

தண்டவாள சீரமைப்பு பணிக்காக மற்றொரு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜல்லி எந்திரத்தின் மீது நள்ளிரவில் வந்த மின்சார ரெயில் உர சியது.

Update: 2017-03-03 22:36 GMT
திருவள்ளூர்,

தண்டவாள சீரமைப்பு பணிக்காக மற்றொரு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜல்லி எந்திரத்தின் மீது நள்ளிரவில் வந்த மின்சார ரெயில் உர சியது. இதில் மின்சார ரெயில் சேதம் அடைந்தது. இரவு நேரம் என்பதால் இந்த விபத்தினால் ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மின்சார ரெயில் உரசியது

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு மின்சார ரெயில் ஒன்று அரக்கோணம் நோக்கி சென்றது. அந்த ரெயில் திருவள்ளூர்- ஏகாட்டூர் ரெயில் நிலையங்களுக்கிடையே இரவு 12 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது மற்றொரு தண்டவாளத்தில் ரெயில் பாதையில் ஜல்லியை சீராக நிரப்பும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட எந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் நீண்டுக்கொண்டிருந்த பெரிய இரும்பு கம்பி மின்சார ரெயில் பெட்டியின் பக்கவாட்டில் உரசியது.

மின்சார ரெயில் பேட்டரி சேதம்

இதனால் மின்சார ரெயில் பெட்டியில் இருந்த பேட்டரி சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து ரெயிலை மீண்டும் இயக்க முடியாத நிலை உருவானது. மின்சார ரெயிலில் உரசியதால் அந்த ஜல்லி எந்திரமும் சேதம் அடைந்தது. இது குறித்து திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

3½ மணி நேரம் பாதிப்பு

உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேட்டரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சேதம் அடைந்த மின்சார ரெயில் நடுவழியில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால், அதில் பயணம் செய்த பயணிகள் அவதியுற்றனர்.

ரெயில்வே ஊழியர்கள் அதிகாலை 3½ மணியளவில் பேட்டரியை சீரமைத்தனர். அதன் பின்னர் அந்த ரெயில் அரக்கோணம் நோக்கி சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

மேலும் செய்திகள்