50 சதவீத இடஒதுக்கீடுக்கு அவசர சட்டம் கோரி சென்னையில் 2-ந்தேதி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Update: 2017-04-29 23:44 GMT
சென்னை,

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடங்களை பாதுகாத்திடவும், உயர் சிறப்பு மருத்துவ கல்வியில் அரசு டாக்டர்களுக்கு கிடைத்து வந்த ஒதுக்கீட்டை பாதுகாத்திடவும் மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘நெக்ஸ்ட்’ என்ற ‘எக்சிட்’ டெஸ்ட் தேர்வை மத்திய அரசு புகுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்