சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் அரசு– தனியார் அலுவலகங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்

சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2017-05-03 22:55 GMT

கோலார் தங்கவயல்,

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் அரசு– தனியார் அலுவலகங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளர் நாகாம்பிகா தேவி உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாநில பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளர் நாகாம்பிகா தேவி தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் தீப்தி ஆதித்யா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி மஞ்சுநாத், தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாநில பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளர் நாகாம்பிகா தேவி பேசியதாவது:–

மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் போதிய மழை பெய்வதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு–தனியார் அலுவலகங்கள், வீடுகளில் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அதிகாரிகள் உடனே அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்