திருப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் இடம் கிடைக்காததால் மாணவிகள் வேதனை

திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் இடம் கிடைக்காததால் மாணவிகள் வேதனையுடன் திரும்பிச்சென்றனர். இது தொடர்பாக கல்லூரி முதல்வருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-08 22:45 GMT
வீரபாண்டி,

திருப்பூர்-பல்லடம் ரோட்டில் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு 2017-2018-ம் கல்வி ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைகிறது.

இந்த நிலையில் நேற்று காலை நடந்த கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். இந்த கலந்தாய்வில் ஒரு சில மாணவிகளுக்கு கல்லூரியில் சேர இடம் கிடைக்கவில்லை.

பெற்றோர் வாக்குவாதம்

இதனால் அந்த மாணவிகள் பெரிதும் வேதனை அடைந்தனர். இதன் காரணமாக மாணவிகளின் பெற்றோர் கல்லூரி முதல்வர் வேதநாயகியை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு உத்தரவுப்படி சாதி அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கூறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டனர். இதனால் அவர் கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு இந்த பிரச்சினை குறித்து விவரம் கேட்டறிந்தார். அவரிடம் பேசிய கல்லூரி முதல்வர் மாணவிகளுக்கான கலந்தாய்வு குறித்தும், இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்தும் விளக்கமாக கூறினார்.

இடஒதுக்கீடு

பின்னர் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை கல்லூரிக்கு மீண்டும் செல்லும்படி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கூறினார். அதன்படி மாணவிகளும், அவர்களது பெற்றோர் உள்பட அனைவரும் மீண்டும் கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வரை சந்தித்து பேசினார்கள்.

அப்போது, கல்லூரி முதல்வர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளையுடன் நிறைவடைகிறது. இதில் பலருக்கு இடம் கிடைக்காததால் இது தொடர்பான விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்து 2-ம் கட்ட கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு வழங்க முயற்சி செய்வதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து, இடம் கிடைக்காத மாணவிகள் கண்ணீருடன் கல்லூரியில் இருந்து திரும்பிச்சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்