திருநாகேஸ்வரத்தில் ஆதரவற்று கிடந்த ஆண் குழந்தை போலீசார் மீட்டனர்

திருநாகேஸ்வரத்தில் ஆதரவற்று கிடந்த ஆண் குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-06-16 22:30 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவில் சாலையில் நேற்றுமுன்தினம் இரவு திருநீலக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தியேட்டர் அருகே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை அழுத வண்ணம் ஆதரவற்று கிடந்தது. மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ள இந்த குழந்தையின் கைகளில் தாயத்து கட்டப்பட்டு உள்ளது. இந்த குழந்தையின் தாய் யார்? எப்படி இந்த குழந்தை இங்கு வந்தது? குழந்தையை யாராவது கடத்தி வந்து இங்கு போட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் குழந்தை எப்படி இங்கு வந்தது என தெரியவில்லை.

விசாரணை

இதைத்தொடர்ந்து போலீசார் குழந்தையை பாதுகாப்பாக எடுத்து சென்று கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். இது குறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்