மின்சார ரெயில் மோட்டார்மேன் பணி இடைநீக்கம்

ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை நிறுத்தாமல் சென்ற மோட்டார்மேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2017-08-07 22:22 GMT

மும்பை,

மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நேற்று முன்தினம் செமிபாஸ்ட் மின்சார ரெயில் ஒன்று போரிவிலியில் இருந்து கிளம்பி சர்ச்கேட் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் போரிவிலி – அந்தேரி இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும்.

ஆனால் அந்த ரெயில் ஜோகேஸ்வரி ரெயில் நிலையம் வந்த போது, பயணிகள் இறங்குவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தனர். ஆனால் அந்த ரெயில் நிற்காமல் ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

இதன் காரணமாக அந்த ரெயிலுக்காக ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், ரெயில் அந்தேரி வந்த பின்னர் தான் அந்த ரெயிலை இயக்கி வந்த மோட்டார்மேனுக்கு ஜோகேஸ்வரியில் ரெயிலை நிறுத்தாமல் மறதியாக இயக்கி வந்தது தெரியவந்து உள்ளது.

இதனால் ஜோகேஸ்வரியில் இறங்க வேண்டிய பயணிகள் அந்தேரியில் இறங்கி பின்னர் அங்கிருந்து வேறு மின்சார ரெயிலில் சென்றனர்.

இந்த நிலையில், ரெயிலை நிறுத்தாமல் மறதியாக இயக்கி வந்த மின்சார ரெயிலின் மோட்டார்மேனை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து மேற்கு ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்