ஜீவானந்தம் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை

ஜீவானந்தம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2017-08-21 23:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான ஜீவானந்தம் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சாரம் அவ்வைத்திடலில் உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தேசிய குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், பொருளாளர் அபிஷேகம், துணைச்செயலாளர் சலீம், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், சேதுசெல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஜீவானந்தம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு திராவிடர் கழகம் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திராவிடர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்த போது அந்த சிலையின் பீடம் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. இதனை பார்த்த முதல்–அமைச்சர் நாராயணசாமி அங்கு இருந்த அரசு அதிகாரிகளிடம், ‘‘தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் சிலைகளை இப்படி கவனிக்காமல் இருக்கிறீர்களே, உடனே சிலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்