தெலுங்கு நடிகைகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியீடு வாலிபர் கைது

தெலுங்கு நடிகைகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்ட பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-11 07:28 GMT
பெங்களூரு,

தெலுங்கு நடிகைகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் சிலர் வெளியிடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தினர் ஐதராபாத் சி.ஐ.டி. பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில், தெலுங்கு நடிகைகளின் ஆபாச படங்களை பதிவிடும் 20 இணையதளங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கு நடிகைகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்டதாக பெங்களூருவை சேர்ந்த தாசாரி பிரதீப்(வயது 26) என்பவரை சைபர் கிரைம் போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தாசாரி பிரதீப் எம்.பி.ஏ. படித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும், கூடுதல் வருமானத்துக்காக அவர் 4 ஆபாச இணையதளங்களை தொடங்கி அதில் தெலுங்கு நடிகைகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து தாசாரி பிரதீப்பை ஐதராபாத் அழைத்து சென்ற போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்