தானேயில் பரிதாபம் ‘லிப்ட்’டில் சிக்கி சிறுமியின் கை துண்டானது

தானேயில், ‘லிப்ட்’டில் சிக்கி சிறுமியின் கை துண்டான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-10-11 23:30 GMT

தானே,

தானே காசர்வடவலியை சேர்ந்த சிறுமி அர்ச்சனா(வயது8). அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள். தன் வீட்டருகே உள்ள கட்டிடத்தில் டியூசனுக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் டியூசன் வகுப்பு உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்குள் வந்து ‘லிப்ட்’டில் ஏறினாள். அப்போது அவளது காலணி ‘லிப்ட்’ இடைவெளியில் சிக்கிக்கொண்டது.

இதனால் அவள் தனது இடது கையை விட்டு காலணியை எடுக்க முயன்றாள். அப்போது திடீரென ‘லிப்ட்’டின் கதவு மூடி இயங்கத் தொடங்கியது. இதில் அவளது கை சிக்கி துண்டானது.

இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ஆயினும் சிறுமி கலங்கவில்லை. தாங்க முடியாத வேதனையிலும் அவள் தனது துண்டான கையை எடுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட வீட்டிற்கு சென்றாள். அங்கு மகளின் கை துண்டாகி இருப்பதை பார்த்து அவளது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனே அர்ச்சனாவை மும்பை பரேலில் உள்ள கே.இ.எம் மருத்துவமனையில் சேர்த்தனர். துரதிருஷ்டவசமாக துண்டான கை முற்றிலுமாக சிதைந்து போனதால் மீண்டும் அதை இணைக்க முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காசர்வடவலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்