குளச்சல் கடலில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி

குளச்சல் கடலில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக பலியானார்.

Update: 2017-10-11 22:45 GMT
குளச்சல்,

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான் மரிய வியான்னி என்ற ஜான்சன்(வயது46), மீனவர்.

 இவர் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நெல்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

நேற்று அதிகாலையில் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டார். இதற்காக விசைப்படகில் ஏறியபோது திடீரென்று தவறி கடலில் விழுந்தார்.

கடலில் மூழ்கினார்

இதைக்கண்ட படகில் இருந்த மற்ற மீனவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் ஜான்சன் கடலில் மூழ்கி பலியானார்.

இதுபற்றி உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் மற்ற மீனவர்கள் கடலில் குதித்து ஜான்சன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஜான்சனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்