பரங்கிமலை அருகே ரெயிலில் அடிபட்டு குழந்தையுடன் பெண் பலி

பரங்கிமலை அருகே ரெயிலில் அடிபட்டு குழந்தையுடன் பெண் பலியானார். அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-10-12 22:30 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த பரங்கிமலை-கிண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு 35 வயது மதிக்கத்தக்க பெண்ணும், அவருடன் வந்த பெண் குழந்தையும் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல் தோற்றம் அளிக்கிறது. அவர்கள் தாய்-மகளாக இருக்கலாம் என்று தெரிகிறது.

போலீஸ் விசாரணை

ஆனால் அவர்கள் இருவரும் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தனரா? அல்லது குடும்ப பிரச்சினையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்களா? என விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்