கமல்ஹாசன் மக்களின் அங்கீகாரத்தை பெற்றால் தான் அதிகாரத்தை பெற முடியும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
நடிகர் கமல்ஹாசன் மக்களின் அங்கீகாரத்தை பெற்றால் தான் அதிகாரத்தை பெற முடியும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. மக்கள் அச்சப்படாத வகையில் தேவையான அனைத்தையும் செய்து வைத்துள்ளோம். அதற்கான பணிகள் 99 சதவீதம் முடிவுற்ற நிலையில் ஒரு சதவீதம் பணிகள் கூட முடியவில்லை என்று ஸ்டாலின் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.
நடிகர் கமல்ஹாசன் மக்களுக்காக பணியாற்ற வருவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் மக்களின் அங்கீகாரத்தை பெற்றால் தான் அதிகாரத்தை பெற முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்கள் பணியாற்றலாம்.
இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என டி.டி.வி.தினகரன் இதற்கு முன்பு பலமுறை கூறியுள்ளார். அது நடந்து உள்ளதா?. அதுபோல பொங்கல் பண்டிகைக்குள் ஆட்சி கவிழும் என்று கூறுவதும் நடக்காது. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கிய இந்த ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.