இந்திய கடலோர காவல் படையை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 57 பேர் கைது

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையை கண்டித்து, ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Update: 2017-11-17 23:00 GMT

ஈரோடு,

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையை கண்டித்து, ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ஒன்று திரண்டார்கள்.

பின்பு அவர்கள் அங்கு இருந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடி ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர். ரெயில் நிலையம் முன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதன்பின்பு ஊர்வலமாக வந்த 8 பெண்கள் உள்பட மொத்தம் 57 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்