மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய மந்திரிக்கு, நாராயணசாமி கடிதம்

இலங்கை கடற்படையினரால் புதுவை மீனவர்கள் அடிக்க கைது செய்யப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2017-11-29 00:00 GMT

புதுச்சேரி,

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மீனவர்கள் சங்கம் சார்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் இலங்கை கடற்படையினரின் தொடர் செயலாக உள்ளது. இந்த செயல் மீனவ சமுதாயத்தினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் துயரம் அடைகின்றனர். எனவே இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பிரதிநிதிகளுடன் பேசி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்