சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பனியன் தொழிலாளர்கள்

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

Update: 2017-12-13 22:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தையல், அயனிங், செக்கிங் உள்பட பல்வேறு பிரிவுகளில் 400–க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் இவர்களுக்கு இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6–ந்தேதி முதல் பெண் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் உரிய தீர்வு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தி வழங்க நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. பனியன் பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சம்பத் தலைமையில் தலைவர் மூர்த்தி, செயலாளர் நடராஜ் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி பிரேமாவை சந்தித்து நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கவும், சம்பளத்தை உயர்த்த பனியன் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து பனியன் நிறுவன நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

தனியார் நிறுவன நிர்வாகிகள் வந்திருந்தனர். தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகளுடன் தொழிலாளர் நலத்துறை அதிகாரி பிரேமா சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தனியார் நிறுவனத்தினர் இன்று(வியாழக்கிழமை) மாலைக்குள் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினை தீரும் வரை தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் இருதரப்பிலும் அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்.

மேலும் செய்திகள்