ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு மாற்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் இருந்து, சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அவரை பலத்த போலீஸ் காவலுடன் அழைத்து சென்றனர்.

Update: 2017-12-13 23:15 GMT
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் பரோல் கேட்டிருந்தார். அதன்பேரில் அவருக்கு 2 மாதம் பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்ததும் அவர் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பேரறிவாளன் மூட்டுவலி, சிறுநீரக தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிக்கடி சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

எனவே சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும், அதற்கு வசதியாக தன்னை வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சிறைத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று பேரறிவாளனை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, நேற்று பகல் 11.45 மணிக்கு அவர் வேலூர் ஜெயிலில் இருந்து, ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜன் தலைமையில் பலத்த போலீஸ் காவலுடன் சென்னை புழல் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். 

மேலும் செய்திகள்