வாலிபர் அடித்துக்கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை

தஞ்சை அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-01-15 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த நடுக்காவேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அம்மன்பேட்டை-நாகத்தி பகுதிக்கு இடையே வெட்டாறு கரையில் வளர்ந்துள்ள நாணல்புதர்களுக்கு மத்தியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று காலை ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர், மர்மநபர்கள் சிலரால் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் விசாரணை

கொலை செய்யப்பட்ட வாலிபரின் இடதுபுற மார்பில் எஸ்.முத்துக்குமார் என்ற பெயரும், வலதுபுற மார்பில் சிங்கம் படமும், வலது கையில் டிராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இடது கையில் பிளேடால் அறுத்து கொண்டதற்கான தழும்புகள் உள்ளன. அவர் அரைக்கால் டவுசர் அணிந்திருந்தார். இவரை மர்மநபர்கள் இங்கு அழைத்து வந்து கொலை செய்து நாணல் புதரில் உடலை வீசி சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி நடுக்காவேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வாலிபர் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்