உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படுமா? புதுவை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக புதுவை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Update: 2018-02-08 04:51 GMT
புதுச்சேரி,

புதுவை அமைச்சரவை கூட்டம் காபினெட் அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ் மற்றும் அரசு செயலாளர்கள் கந்தவேலு, பார்த்திபன், ஜவகர், மணிகண்டன், மிகிர்வரதன், சுந்தரவடிவேலு, செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த போராடி வரும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு அதை அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. இதற்கான நிதியாதாரங்களை திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் புதுவையில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. தமிழகத்திலிருந்தும் மணல் பெற முடியாத நிலை தற்போது நிலவி வருகிறது. இந்தநிலையில் செயற்கை மணல் மூலம் ஒரு சில பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் வெளிநாட்டிலிருந்து மணலை இறக்குமதி செய்வது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட வரையறைகள் தயார் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தன்னாட்சி நிறுவனமான மகாத்மாகாந்தி பல் மருத்துவக்கல்லூரியை புதுவை அரசு மருத்துவக்கல்லூரியின் கீழ் கொண்டுவருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் பெங்களூரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் புதுவை அரசுப்பள்ளி மாணவர்களுக் கான மதிய உணவினை நவீன முறையில் தரம் உயர்த்தி வழங்க முன்வந்துள்ளதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்