ஏரியில் ஆக்கிரமித்து கட்டியுள்ள 179 வீடுகளையும் காலி செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும், கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

பண்ருட்டி சின்னஏரியில் ஆக்கிரமித்து கட்டியுள்ள 179 வீடுகளையும் காலி செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2018-02-19 21:30 GMT
கடலூர்,

பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கடலூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் 179 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட சின்னஏரி என்கிற களத்து மேட்டில் வீடு கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறோம். அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் திடீரென நகராட்சி நிர்வாகம் எங்களை காலி செய்ய 21 நாட்கள் அவகாசம் கொடுத்து நோட்டீசு வழங்கி உள்ளனர். நாங்கள் வசிக்கும் பகுதியில் சிமெண்டு சாலை, தெருவிளக்கு, வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதி என அனைத்து வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. ஆனால் நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பிய பிறகே நாங்கள் வசிக்கும் பகுதி ஏரி என்று எங்களுக்கு தெரிய வந்தது.

ரேஷன் கார்டு, குடும்ப அட்டை போன்றவற்றில் புதுநகர் களத்துமேடு என்று தான் உள்ளது. இதற்கிடையே எங்களை திடீரென காலி செய்ய சொல்வது மிகுந்த மன உளைச்சலை தருகிறது. எங்க ளுக்கு வேறு எங்கும் இடம் கிடையாது. இந்த வீடுகளை அகற்றினால் நாங்கள் குடும்பத்தோடு சாவதை தவிர வேறுவழியில்லை.

ஆகவே எங்களுக்கு பண்ருட்டி நகராட்சி பகுதியிலேயே வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். வீடுகளை இழக்கும் எங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். தற்போது எங்கள் குழந்தைகள் அரசு பொதுத்தேர்வு எழுத இருப்பதால் வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர் இது பற்றி தாசில்தார் நேரில் வந்து விசாரணை நடத்துவார் என்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

விருத்தாசலம் அருகே தொரவளூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டி 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஏரிக்கரை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களை உடனே காலி செய்யுமாறு பொதுப்பணித்துறையினர் நோட்டீசு வழங்கி உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட பா.ம.க. செயலாளர் சுரேஷ் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக பட்டா, விவசாய விளைநிலங்கள் இல்லை. இலவச வீட்டுமனை பட்டா கேட்டும், நிலம் கேட்டும் பல முறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுமனைகளை உடனே காலிசெய்ய வேண்டும் என பொதுப்பணித்துறையினர் நோட்டீசு வழங்கியுள்ளனர். எங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும், அதுவரையில் ஏரிக்கரையில் குடியிருக்க கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் சந்தோஷ்ணி சந்திரா நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

மேலும் செய்திகள்