வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

நண்பன் உயிரிழந்த விரக்தியில், வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தாராவில் நடந்துள்ளது.

Update: 2018-02-19 23:37 GMT
மும்பை,

மும்பை தாராவி, சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ்(வயது21). இவரது நண்பர் அமித். அமித்தும், கணேசும் சிறு வயது முதலே நண்பர்கள். 2 பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் அமித் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது அவருடைய நண்பர் கணேசுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீண்டு வரமுடியவில்லை. எப்போதும் நண்பன் அமித் பற்றியே மற்றவர்களிடம் பேசி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கணேஷ் தனது குடிசை வீட்டின் மேல் தளத்திற்கு சென்றார். அப்போது ஏதோ விழும் சத்தம்கேட்டது. இதையடுத்து கணேசின் பெற்றோர் வீட்டின் மேல் தளத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கணேஷ் அவருடைய அம்மாவின் சேலையில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கணேசை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பன் உயிரிழந்த விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் தாராவி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்